Close
மார்ச் 7, 2026 2:50 மணி

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 24ம் தேதி துவங்க உள்ளது. இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 21-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 24-ம் தேதி அதிகாலையில் சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் மாதம் 3-ம் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதைகளில் தேவையான அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், இட வசதிகள், தூய்மை பணிகள் குறித்தும், பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top