நாமக்கல்லில், மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்டார்.
பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களில் பாஜக கூட்டணி 202 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் அரசு அமைக்க உள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில் அதிகப்படியாக பாஜக வேட்பாளர்கள் 89 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், பீகார் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் விழா நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.
மாவட்ட பாஜ தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில பாஜ துணைத்தலைவரும், ராசிபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பிர்சா முண்டாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாவட்ட எஸ்டி அணி தலைவர் கார்த்திகேயன், மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்ட பாஜக துணைத்தலைவர் அருள், மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட அமைப்பாளர் சதீஷ், நகர தலைவர் தினேஷ், ராதிகா, வேல்ராஜ், மணிவேல்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் நகர பொதுச்செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.




