குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தில் உள்ள உம்ரலா கிராமம், புதுமையான மற்றும் நவீன ‘ஸ்மார்ட்’ பொதுக் கழிப்பறை வசதிகளின் மூலம் ஒட்டுமொத்த கிராமப்புற சுகாதாரத்திற்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
சுத்தமான கழிப்பறை வசதிகள் பொது சுகாதாரம், கண்ணியம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு இன்றியமையாதவை என்பதை இந்த கிராமத்தின் அணுகுமுறை வெளிப்படுத்துகிறது.
அரசு மானியங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கழிப்பறைகள், குஜராத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட பொதுக் கழிப்பறைகளாகும்.
இந்த வசதிகளில் விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் சுகாதார செயல்பாடுகளுக்காக சென்சார் அடிப்படையிலான அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
இது குறித்து கிராம பஞ்சாயத்துத் தலைவர் கூறியதாவது: மாநில அரசின் மானியத்துடன் மூன்று வெவ்வேறு இடங்களில் பொதுக் கழிப்பறைகளை உருவாக்கினோம். இதில் சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படும் விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது மின்சாரம் மற்றும் தண்ணீரைச் சேமிக்க உதவுகிறது. இந்த சுகாதாரமான வசதிகளால் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
உம்ரலாவின் இந்த முயற்சி கிராமத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் முன்பைவிடச் சுத்தமாக உள்ளது, வழக்கமான பராமரிப்பும் உறுதி செய்யப்படுகிறது.
குறிப்பாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் ஆகியோருக்கு வசதியை அளித்துள்ளது.
குஜராத்தில் சிறந்த கழிப்பறை வசதிகளைப் பராமரித்ததற்காக, உம்ரலா கிராமத்திற்கும் அதன் பஞ்சாயத்துத் தலைவருக்கும் சமீபத்தில் முதலமைச்சரால் மாநில அளவில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




