நாமக்கல்லில் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு, விவசாயியிடம் ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் – மோகனூர் ரோட்டில் உள்ள முல்லைநகரைச் சேர்ந்தவர் விவசாயி பிரேம்குமார் (71). இவர் கடந்த 17-ம் தேதி தனது ஸ்கூட்டரில் ஆண்டவர் நகரில் உள்ள நிலத்தை பார்வையிட சென்றார். பின்னர் துறையூர் ரோட்டில், அண்ணாநகர் வழியாக சென்று கொண்டு இருந்தபோது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டு ஸ்கூட்டரில் ஏறி உள்ளார்.
பின்னர் வாகனத்தை அண்ணாநகர் ஃபேர்லேண்ட் சுடுகாட்டிற்கு ஓட்டிச் செல்லுமாறு மிரட்டி உள்ளார். எனவே பிரேம்குமார் வேறுவழியின்றி சுடுகாட்டிற்கு சென்று உள்ளார். அங்கு மறைத்து வைத்து இருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, பிரேம்குமாரின் மணிபர்சில் இருந்த ரூ.9,500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு, பேங்க் பாஸ்வேர்டை வாங்கி கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டார்.
பின்னர் அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி பிரேம்குமார் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்துக் கொண்டார். இது குறித்து பிரேம்குமார் நாமக்கல் காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பிரேம்குமாரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது அலங்காநத்தம் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து யோகேஸ்வரனை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.




