திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் 1 1ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் வழங்கினார்.
இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சண்முகம், ஆசிரியர் சங்க செயலாளர் ஜான்வெலிங்டன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் செந்தில்குமார், வீரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் வழங்கி பேசியதாவது,
தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிலே எந்த துறைக்கும் இவ்வளவு நிதி ஒதுக்கவில்லை. ஆனால் பள்ளிகல்வி துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி கொடுத்துள்ளார்.
மேலும் மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்வி பெற தங்குதடையின்றி பள்ளிக்கு வருகை தர காலைச் சிற்றுண்டி வழங்கி வருகிறார். அரசுபள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கி வருகிறார்.
மாணவர்களின் கல்வி மீது எந்த அளவிற்கு அக்கறை காட்டுகிறது அதன் அடிப்படையிலே ஆரம்ப பள்ளியாக இருக்கட்டும், நடுநிலைப் பள்ளியாக இருக்கட்டும், உயர் நிலை பள்ளி, மேல்நிலைப் பள்ளி இப்படி ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பல்வேறு கட்டடங்கள் கட்டமைப்பு வசதிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்வி பயிலுகின்ற மாணவிகள் உயர்கல்வி செல்லும் போது மாதாமாதம் கல்வி ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. நடைபெறுகிற தேர்வில் மாணவ மாணவிகள் எல்லோரும் உங்களுடைய பாடபுத்தகத்தை கற்பித்து சிறந்த அளவில் மதிப்பெண் பெற்று, நமது பள்ளியை முதன்மை பள்ளியாக வரும் கல்வியாண்டில் தேர்வில் வளர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் என்றார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், முத்துகணேசன் , சதீஷ்குமார், மற்றும் கல்வி துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




