அமெரிக்காவில் திறமை வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த உதவும் H-1B விசா திட்டத்தில், இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவில் மோசடி நடப்பதாக அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொருளாதார நிபுணர் டாக்டர் டேவ் பிராட் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமெரிக்கா ஒரு வருடத்திற்கு 85,000 H-1B விசாக்களை மட்டுமே வழங்க சட்டப்பூர்வ உச்ச வரம்பை ( நிர்ணயித்துள்ளது. ஆனால், “ஸ்டீவ் பேனனின் வார் ரூம்” என்ற பாட்காஸ்டில் பேசிய டாக்டர் பிராட், “H-1B விசாக்களில் 71 சதவீதம் இந்தியாவிலிருந்து வருகின்றன. சட்டப்படி 85,000 விசாக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட மண்டலமான மெட்ராஸ் (சென்னை) மாவட்டத்திலிருந்து மட்டும் 2,20,000 விசாக்கள் பெறப்பட்டுள்ளன,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது தேசத்தின் மொத்த வரம்பை விட 2.5 மடங்கு அதிகம் என்றும், இந்தத் திட்டம் “தொழில்துறை அளவிலான மோசடியால் கைப்பற்றப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த விசா மோசடிகள் மூலம் திறன் இல்லாதவர்கள் திறமையானவர்கள் எனக் கூறிக்கொண்டு அமெரிக்காவிற்குள் நுழைவதாகவும், இது அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்து அவர்களின் எதிர்காலத்திற்கு நேரடி அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார்.
2024ஆம் ஆண்டில், சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு முக்கியப் பிராந்தியங்களுக்கான விண்ணப்பங்களைக் கையாண்டு, சுமார் 2,20,000 H-1B விசாக்கள் மற்றும் கூடுதலாக 1,40,000 H-4 சார்ந்த விசாக்களைச் செயல்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே உலகின் மிகவும் பரபரப்பான H-1B செயலாக்க மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தூதரகத்தில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வெளியுறவு சேவை அதிகாரி சித்திக், பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். 2005 முதல் 2007 வரை தான் விசாரித்த H-1B விசாக்களில் 80 முதல் 90 சதவீதம் வரை போலியானவை என்றும், இதில் போலி கல்விச் சான்றிதழ்கள், போலியான ஆவணங்கள் மற்றும் மாற்று விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் போன்ற பகுதிகளில் போலி வேலைவாய்ப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்கள் வெளிப்படையாக விற்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசா மோசடிகளை அடையாளம் காண அதிகாரிகள் முயன்றபோது, உள்நாட்டில் எதிர்ப்பு மற்றும் குறிப்பிடத்தக்க அரசியல் அழுத்தம் இருந்ததாகவும், அவர்களின் முயற்சி “சட்டவிரோதமான செயல்” எனக் கூறி நிராகரிக்கப்பட்டதாகவும் சித்திக் குற்றம் சாட்டியுள்ளார்.
H-1B விசா திட்டம் குறித்த இந்த மோசடி குற்றச்சாட்டுகள், அமெரிக்காவில் புதிய நிர்வாகத்தின் கீழ் விசாக்கள் பற்றிய தீவிரப் பரிசீலனைக்கு வழிவகுத்துள்ளது. எனினும், அமெரிக்கா தனது பணியாளர் பற்றாக்குறையை நிரப்ப உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க வேண்டும் என்று கூறி, H-1B திட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




