நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் டிச. 3ம் தேதி வரை 5 நாட்களுக்கு, பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில், பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. பகல் நேர அதிகபட்ச வெப்பம் 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேர வெப்பம் 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவியது.
இன்று நவ. 29-ம் தேதி முதல் டிச. 3ம் தேதி வரை 5 நாட்களுக்கு அதிகபட்ச பகல் நேர வெப்ப நிலை 27 டிகிரி முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 20 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 70 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம், வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 4 முதல் 10 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
இன்று நவ. 29ம் தேதி 25 மி.மீ., நாளை 30ம் தேதி 12 மி.மீ, டிச. 1ம் தேதி 10 மி.மீ., டிச. 2ம் தேதி 17 மி.மீ., டிச. 3ம் தேதி 11 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




