செக்கானூரணி அருகே பன்னியான் கொக்குளம் பகுதியில் உள்ள விரிவாக்க கால்வாயில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்திற்கு 350 ஏக்கர் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், பன்னியான் கொக்குளம் அருகே விரிவாக்க கால்வாயில் மூன்று கண்மாய்கள் செல்லும் வகையில் நீர் திறக்கப்பட்டது. 350 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் செக்கானூரணி ஊர்குளம் கண்மாய், புளியகுளம் கோரைக்கண்மாய், கிண்ணிமங்கலம் கீழ்க்கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு சுமார் ஒன்பது கிலோமீட்டர் நீளம் பயணம் செய்து தண்ணீர் பாசன வசதி பெறுகிறது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருமங்கலம் பாசனகோட்டை பொறுப்பாளர் ராமன் கூறுகையில் , கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக செக்கானூரணி பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வரும் நிலையில் திருமங்கலம் பிரதான கால்வாயில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் துணைக் கால்வாய்களிலும் சொல்கிறது.
இந்த நிலையில், செக்கானூரணி அருகே பன்னியான் கொக்குளம் விரிவாக்க கால்வாயில் ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் சுமார் 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வாய்ப்பு உள்ளது
கடந்த மூன்று ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக திறக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் முறை பாசனம் மூலம் இந்த பகுதியில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசை எதிர்பார்க்காமல் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பாசன விவசாய சங்க நிர்வாகிகள் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளனர் .
இந்த தண்ணீர், செக்கானூரணி, கொக்குளம், புளியங்குளம், கின்னிமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பயன்படுகிறது. ஆகையால், விவசாயிகள் பொதுமக்கள் இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், விவசாய சங்க பிரிதிநிதிகள் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




