Close
மார்ச் 7, 2026 6:04 மணி

தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ. 10 ஆயிரம் பொங்கல் உதவித்தொகை வழங்க மத்திய அரசுக்கு வி.மு.க கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மத்திய அரசு நேரடியாக ரூ. 10 ஆயிரம் பொங்கல் உதவித்தொகை அளிக்க வேண்டும் என, பிரதமருக்கு விவசாய முன்னேற்றக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் முன்னேற்ற கழக மாநில தலைவர் செல்ல ராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர், பாரத பிரமருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தற்போது தமிழகத்தில் பல இடங்களில் கனமழையால் விவசாய தோட்டங்களில் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவடை காலங்களில் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். ஒரு பகுதியில் வெள்ளம், மற்றொரு பகுதியில் வேளாண் பயிர்களில் பல்வேறு பூச்சிகள் தாக்குதலால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை சார்ந்துள்ள பல்வேறு தொழில்களும் நலிவடைந்து வருகிறது.

விரைவில் பொங்கல் பண்டிகை வர உள்ளதால், தைப்பொங்கலை விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் சிறப்பாக கொண்டாடுவதற்கு அவர்களிடம் போதிய நிதி வசதி இல்லை.

சமீபத்தில் கோவை வந்த பிரதமர் விவசாயிகளை சந்தித்து பேசியுள்ளார். இந்த சூழ்நிலையில் பொங்கல் விழா மற்றும் உழவர் தினத்தை விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் ஏனைய பொதுமக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில், வெள்ள நிவாரணமாகவும், பொங்கல் பரிசாகவும், தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ரேஷன் கார்டு மூலம், மத்திய அரசு நேரடியாக ரூ. 10 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் உதவித்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top