Close
மார்ச் 7, 2026 1:40 மணி

மாநில அளவிலான காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் ஒத்திவைப்பு: மாநில லாரி சம்மேளனம் அறிவிப்பு

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ்

வரும் 10ம் தேதி முதல் நடைபெற இருந்த, மாநில அளவிலான காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தன்ராஜ், செயலாளர் சாத்தையா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு, 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட லாரி உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும், எப்.சி. சான்றிதழ் கட்டணத்தை சுமார் 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இதை வாபஸ் பெறக்கோரி, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், வரும் 10ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பரமத்தியில் நடைபெற்ற, மாநில சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எப்.சி. சான்றிதழ் கட்டணம் உயர்வு சம்மந்தமாக, தமிழக முதல்வரின் கவனத்திற்கும், மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று, கட்டண உயர்வை குறைக்க ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

அதன் அடிப்படையில், வரும் 10ம் தேதி முதல் நடப்பதாக இருந்த காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது. உறுப்பு சங்க நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள் வழக்கம் போல் தங்களது வாகனங்களை இயக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top