Close
மார்ச் 7, 2026 4:22 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் 100 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தமிழகம் முழுவதும் 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இப்பணிக்காக 1,629 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசு அலுவலகங்கள் மூலமாகவும், ரேஷன்கடைகள் மூலமாகவும், ஓட்டுச்சாவடிகள் மூலமாகவும் திரும்பப் பெறப்பட்டு வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து, மொத்தம் 14 லட்சத்து 66 ஆயிரத்து 660 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு தேர்தல் கமிஷன் வெப்சைட் மூலம் அப்லோட் செய்யப்பட்டு வருகிறது.

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 828 படிவங்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 377 படிவங்களும், நாமக்கல் தொகுதியில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 52 படிவங்களும், பரமத்திவேலூர் தொகுதியில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 632 படிவங்களும், திருச்செங்கோடு தொகுதியில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 858 படிவங்களும், குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 913 படிவங்களும் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

இதன் மூலம் 100 சதவீதம் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன. கணக்கெடுப்பு படிவங்கள் 100 சதவீதம் மின்னணு மயமாக்கப்பட்டு உள்ளதன் அடிப்படையில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை பதிவு என்ற அடிப்படையில் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான பட்டியல் சட்டசபை தொகுதி வாரியாக தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி ஏஜென்டுகளின் வாட்ஸ்-அப் குரூப்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பதிவிடப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலை வைத்து முகவரி மாறி சென்றவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் அவர்களிடம் கணக்கெடுப்பு படிவங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வருகிற 11-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதற்கு பின்னர் கணக்கீட்டு படிவங்களை கொடுக்காத நபர்களின் பெயர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது நீக்கம் செய்யப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top