Close
மார்ச் 7, 2026 6:03 மணி

நாமக்கல் வழியாக கரூருக்கு கூடுதல் ரயில்கள்: ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை

டில்லியில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை, மத்திய இணை அமைச்சர் முருகன், அதிமுக பிரமுகர்கள் தம்பிதுரை, கரூர் விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல், கரூர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க கோரி மத்திய இணை அமைச்சர் முருகனுடன் இணைந்து அதிமுக எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அதிமுக அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் ஆகியோர், மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

டெல்லியில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், ராஜ்யசபா அதிமுக எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அதிமுக அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் ஆகியோர், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை நேரில் சந்தித்து, சேலம் வழியாக நாமக்கல் மற்றும் கரூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் எனவும், சில ரயில்களை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் அஸ்வினி வைஷனவ் கோரிக்கைகளை பரிசீலித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மதுரை, கரூர், சேலம் வழியாக சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். வண்டி எண்- 20671 மதுரை – பெங்களூர், மறுமார்க்கம் வண்டி எண்-20672 பெங்களூர் – மதுரை வந்தே பாரத் ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், பெங்களூர் சென்று வருகிறது. இதனை மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூர் வரை இயக்க வேண்டும்.

மறுமார்க்கத்தில் பெங்களூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இயக்க வேண்டும். தஞ்சை – மைசூர் இடையே புதிய வந்தே பாரத் ரயில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் இதன்மூலம் திருச்சிக்கு பாதிப்பு இருக்காது.

வண்டி எண் : 22153 சென்னை-சேலம், வண்டி எண் : 22154 சேலம்-சென்னை ஆகிய 2 ரயில்களை நாமக்கல்வழியாக கரூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

வண்டி எண்- 20601, மறுமார்க்கம் வண்டி எண்-20602 சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ், கரூர் ரயில் நிலையம் வழியாக வாரம் மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை தினசரி வண்டியாக இயக்க வேண்டும். இந்த முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், நாமக்கல், கரூர், ராசிபுரம், மோகனூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top