Close
மார்ச் 7, 2026 1:25 மணி

வீடியோ வெளியிட்டு தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சி: நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல்லில் தூய்மைப்பணியாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையம் சாவடி தெருவை சேர்ந்தவர் இந்திராணி (57). இவர் கடந்த 1997-ம் ஆண்டு முதல், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இந்திராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  இந்திராணியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் இந்திராணிக்கு கடந்த 25.10.25 ம் தேதி அன்று கீழ்சாத்தம்பூர் ஊராட்சியில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் தூய்மை பணியாளராக பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளராக தனக்கு பணி ஏன் வழங்கவில்லை என இந்திராணி கேட்டு உள்ளார். அதற்கு அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்திராணி தொடர்ந்து கீழ்சாத்தம்பூரில் ஒரு மாதமாக வேலை பார்த்து வந்து உள்ளார். அதற்கான சம்பளத்தை கொடுக்காமல், அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இந்திராணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனக்கு யாருமில்லை. மகன், மகள் இறந்து விட்டனர், மிகவும் சிரமமாக உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி அலுவலக உதவியாளர் பணியை வழங்கமால் தூய்மை பணியாளர் பணியை ஏன் கொடுத்தீர்கள் என கேட்டதற்கு, நீங்க தானே ஆசைப்பட்டு கேட்டீங்க, அதனால் தான் அந்த பணியை வழங்கினோம் என அதிகாரிகள் கூறியதாகவும், தனது சாவுக்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top