Close
ஏப்ரல் 23, 2026 11:27 மணி

நாமக்கல்லில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார்.

தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு, 103 பயனாளிகளுக்கு ரூ. 28.38 லட்சம் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

ஐ.நா சபை 18, டிசம்பர் 1992 அன்று இன, மத அல்லது மொழியியல், தேசிய அல்லது இன சிறுபான்மையினருக்கு பொருந்தும் தனிநபர் உரிமைகள் பற்றிய அறிக்கையை அங்கீகரித்து அறிவித்தது. அதனை நினைவு கூறும் வகையில், இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் 2013-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகின்றார். மேலும், சிறுபான்மையினரின் வாழ்வாதாரம் முன்னேற மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் -டாம்கோ திட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு டூ வீலர் ழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 49,760 முஸ்லீம், கிறிஸ்துவர், சீக்கியர், ஜெயின் மதம் சார்ந்த சிறுபான்மையினர்கள் உள்ளனர். முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் 451 பயனாளிகளுக்கு ரூ.74.35 லட்சமும், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் 52 பயனாளிக்கு ரூ. 10.20 லட்சமும் சிறுதொழில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அரசின் அனைத்து திட்டங்களையும் சிறுபான்மையின மக்கள் பயன்படுத்தி கொண்டு தங்கள் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்தி கொள்ள வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் சிறுபான்மையினர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top