திமுக சார்பில் நடைபெறும், வெல்லும் தமிழ்ப்பெண்கள், மேற்கு மண்டல மாநாட்டில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் இருந்து, அதிக அளவில் மகளிர் கலந்து கொள்ள வேண்டும் என, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், வரும் 29ம் தேதி, வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்ற தலைப்பில், திமுக மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எம்.ஏ., ராமலிங்கம், தொகுதி பொறுப்பாளர்கள் நன்னியூர் ராஜேந்திரன், ரேகா பிரியதர்ஷினி, முனவர்ஜான், மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி, மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வரும் 29ம் தேதி, வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்ற தலைப்பில் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எம்.பி., கனிமொழி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மாநில மகளிர் மாநாட்டிற்காக வரும் மகளிர், தி.மு.க., வின் கொள்கைகளை அறிந்து, மக்களுக்கு எடுத்துச் சொல்வதுடன், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் கட்சிக்காக உழைக்கக் கூடியவராக இருக்க வேண்டும். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் 10 பேர் வீதம், அதிக அளவில் மகளிர் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான பணியில் ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் ஈடுபட வேண்டும்.
மத்திய அரசின், 100 நாள் வேலைவாய்ப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும், 24ம் தேதி காலை 9 மணிக்கு, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றிய தலைநகர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதில், ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும், 1,000 பேர் வீதம் பங்கேற்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் மூலம் தற்போது வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளதுவு. இதில் விடுபட்டுள்ள வாக்காளர்களை கண்டறிந்து மீண்டும் சேர்க்கும் பணியில் திமுக பிஎல்ஏ 2 ஏஜெண்டுகள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில நிர்வாகிகள் ஆனந்தகுமார், ராஜேஷ்பாபு, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமாமார், பூபதி உள்ளிட்ட திரளானவ நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




