Close
மார்ச் 7, 2026 7:19 மணி

திருவண்ணாமலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் திடீா் வாகன சோதனை, பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் திடீா் வாகன சோதனையில் ஈடுபட்டதால் கிரிவலம் வரும் பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

அதனால் திருவண்ணாமலையில் திடீரென ஆட்டோக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் தாண்டியது. ஆட்டோக்களை இயக்க வட்டாரப் போக்குவரத்து துறை பல கட்டுப்பாடுகளை விதித்தும் அதை மீறி ஆட்டோக்களை இயக்குபவர்கள் தான் அதிகம். போக்குவரத்து நெரிசல் காரணமாக மாட வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஆட்டோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

இருந்தும் திருவண்ணாமலை உள்ள குறுக்கு சந்துகளில் அதிவேகமாக ஆட்டோக்கள் செல்வதால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக அண்ணாசிலையில் இருந்து குறுக்கு சந்து சென்னப்பர் தெரு வழியாக சின்ன கடை தெரு செல்லும் ஆட்டோக்களால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் பல தெருக்களில் ஆட்டோக்களால் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் கிரிவலப் பாதையில் அதிவேகமாக செல்வதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே இவர்களை கட்டுப்படுத்த வேண்டும், இந்த ஆட்டோக்களுக்கு பர்மிட் உள்ளதா என சோதனை செய்ய வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் உத்தரவின் பேரில், திருவண்ணாமலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி தலைமையில் திடீா் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய பேருந்து நிலையம், அண்ணா நுழைவுவாயில், பெரியாா் சிலை சந்திப்பு உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாதது, க்யூஆா் கோடு இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடா்பாக 4 ஆட்டோக்கள், 4 மினி வேன்கள், 2 லாரி உள்பட 16 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதோடு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தொடா்ந்து வாகனச் சோதனைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி தெரிவித்தாா். மேலும், கிரிவலப் பாதையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் ஆட்டோக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர். பௌர்ணமி நாளில் சன்னதி தெரு மட்டுமின்றி அனைத்து வீதிகளையும் ஆட்டோக்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன.

வீட்டில் இருப்பவர்கள் கூட வெளியே வர முடியாது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்,  தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை முறைப்படுத்த காவல்துறையினர் இல்லை.  ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட காவல்துறையினர் முன்வர வேண்டும் என்றனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களில் புறவழிச் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குழுக்கள் அமைத்து ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிக்க வேண்டும் சாலை விதிகளை மதிக்காத ஆட்டோக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலை பொதுமக்களின் நீண்ட நாள் இருந்து வந்தது. தற்போது இந்த வாகன சோதனை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

தெருவில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top