கொல்லிமலை சேலூர்நாடு, குழிப்பட்டி முதல், எருமப்பட்டி வரை ஆங்கிலேயர் ஆட்சியில் போடப்பட்ட குதிரைப் பாதையை, தார் ரோடாக மாற்றித்தரக்கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுகா, சேலூர் நாடு, தின்னனூர் நாடு, தேவனூர் நாடு பஞ்சாயத்து பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 15,000க்கும் அதிகமான மலைவாழ் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள், சமவெளி பகுதிக்கு செல்ல, 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால், மாவட்ட தலைநகரான நாமக்கல்லுக்கு வருவதற்கு, 90 கி.மீ., தூரத்திற்கு மேல் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆபத்து, விபத்து, பிரசவம், மாரடைப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மரணம் நிகழ்வது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.
விவசாயிகள் விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், நீண்ட தூரம் பயணிக்கும் நிலை உள்ளது. அதன் காரணமாக, அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பொருள் மற்றும் நேரம் விரயம் ஏற்படுகிறது. குறிப்பாக, சேலூர் நாடு மணப்பாறை சந்தையில் இருந்து, ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்ட குதிரைப்பாதைக்கு வருவதற்கு, வெறும் 2 கி.மீ., தூரமே உள்ளது.
சேலூர் நாடு குழிப்பட்டி முதல், எருமப்பட்டி வரை 7 கி.மீ., தூரம். எருமப்பட்டியில் இருந்து நாமக்கல் வருவதற்கு, ஆங்கிலேயர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்டு வந்த குதிரைப் பாதையை மீண்டும் பயன்படுத்துவதால், மாவட்ட தலைநகர் நாமக்கல் வருவதற்கு, வெறும் 34 கி.மீ., தூரமே ஆகிறது.
இதனால், வழக்கமான செம்மேடு, சோளக்காடு வழியாக செல்வதை விட 46 கி.மீ., பயண தூரம் குறைகிறது. இதன் மூலம் ஏற்படக்கூடிய பொருள் மற்றும் நேர விரயமும் சேமிக்கப்படுகிறது.
மேலும், மலைவாழ் மக்கள் தங்கள் அன்றாட பணிகள் மற்றும் மருத்துவம், பிரசவம், விவசாய பொருட்கள் கொண்டு சென்று விற்பனை செய்து வர, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவர எளிதாக அமையும். இவற்றை கருத்தில் கொண்டு, குதிரைப் பாதையை புனரமைப்பு செய்து தார் ரோடாக மாற்றித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான மலைவாழ்மக்கள் கலந்துகொண்டனர்.
மலைவாழ் மக்கள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பிரகாஷ், துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




