Close
ஏப்ரல் 24, 2026 12:50 காலை

அரசு விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கலெக்டர் உத்தரவு

எருமப்பட்டி ஜல்லிக்கட்டு - கோப்புப்படம்

நாமக்கல் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விருப்பமுள்ளவர்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி போட்டி நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்துப் பேசியதாவது:

ஜல்லிக்கட்டு நடத்த விருப்பமுள்ளவர்கள், முன்கூட்டியே மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் செய்து அனுமதி பெறவேண்டும். அனுமதி வழங்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஜல்லிகட்டு நடத்தக் கூடாது.

ஜல்லிகட்டு நடத்த அனுமதி கோரி ahd.tn.gov.in/jallikattu என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்தும் ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பிராணிகள் வதை தடுப்பு குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விழா குழுவினர் ஜல்லிகட்டு நிகழ்வு தொடர்பாக விதிமுறைகள் மற்றும் அரசு உத்தரவுகளை பின்பற்றுவதை உறுதி செய்ய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஜல்லிகட்டு நிகழ்விற்கான இன்சூரன்ஸ் சான்று அளிக்க வேண்டும்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்தப்படாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது.

ஜல்லிகட்டின் ஆரம்பம் முதல் முடிவு வரை உள்ள அனைத்து நிகழ்வுகளும், குறிப்பாக காளை நுழைவது முதற்கொண்டு வெளியேறும் வரையிலான நிகழ்வுகள் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடைபெறும் பகுதிக்குட்பட்ட வட்டாட்சியர், டிஎஸ்பி, கால்நடை பரமாரிப்பு துறை உதவி இயக்குநர், பிடிஓ, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், தீயணைப்பு அலுவலர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து நல்லமுறையில் ஜல்லிக்கட்டு நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளும் ஆன்-லைன் மூலம் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், விழாக்குழுவினர் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி விழாவினை நடத்த ஏதுவாக அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இதுவரை 5 விண்ணப்பங்கள் வந்துள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் வளர்மதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top