இந்தியாவில் தனிநபர் மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு கடந்த செப்டம்பர் 22, 2025 முதல் ரத்து செய்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின் பலன்கள் தற்போது தெரியத் தொடங்கியுள்ளன.
பாலிசிபஜார் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, மருத்துவக் காப்பீடு எடுப்பவர்களின் சராசரி காப்பீட்டுத் தொகை 31 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விலக்கிற்கு முன்பு ரூ. 14.5 லட்சமாக இருந்த சராசரி காப்பீட்டுத் தொகை, தற்போது ரூ. 19 லட்சமாக உயர்ந்துள்ளது.
10 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் திட்டங்களை எடுப்பவர்களின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், 25 லட்சத்திற்கும் அதிகமான தொகை கொண்ட பாலிசிகளின் தேவை 85 சதவீதம் வரை எகிறியுள்ளது.
முன்னதாக 10 லட்சத்திற்கும் குறைவான காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை 24 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, மக்கள் குறைந்தபட்ச காப்பீட்டிற்குப் பதிலாக, அதிக கவரேஜ் தரும் திட்டங்களையே தற்போது விரும்புகின்றனர்.
இந்த வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. 2025-ம் ஆண்டில் காப்பீடு வாங்கியவர்களில் 18 முதல் 35 வயதுடையவர்கள் மட்டும் 30 சதவீதம் பேர் ஆவர். மேலும், டில்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களைத் தாண்டி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் காப்பீடு எடுப்பவர்களின் விகிதம் 63.5 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவக் காப்பீடு மலிவான விலையில் கிடைக்கத் தொடங்கியதே இந்த மாற்றத்திற்கு முதன்மையான காரணமாகும். வரிச் சுமை குறைந்ததால், மிச்சமாகும் தொகையை மக்கள் தங்களின் காப்பீட்டு வரம்பை அதிகரிக்கப் பயன்படுத்துகின்றனர்.




