ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி, நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தற்போது ஏழை மற்றும் மற்றும் நடுத்தர மக்கள் ரயில் சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் மத்திய அரசு ரயில் கட்டணத்தை 2ஆம் முறையாக உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
முதல் 215 கிலோமீட்டருக்கு மட்டும் கட்டண உயர்வு இல்லை, 216 ஆவது கி.மீட்டரில் இருந்து 2 பைசா வீதம் வகுப்புக்கு ஏற்றார் போல் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு பயணிக்கும் ரூ5 முதல் ரூ30 வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும்.
குறிப்பாக ஒவ்வொரு நடுத்தர மக்களின் குடும்பச் செலவில், போக்குவரத்து செலவு அதிகம். ரயில் பயணம் அதனை எளிதாக்குகிறது. இதனை பாதிப்பது போல் தற்போது ரயில் கட்டணம் உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி தனியார் நிறுவன ஊழியர்கள், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
பொதுமக்களின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு ரயில் கட்டண உயர்வை, ரயில்வே அமைச்சகம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.




