Close
மார்ச் 7, 2026 2:51 மணி

முட்டை உற்பத்தி: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

அக்டோபர் 2025 நிலவரப்படி, தமிழகத்தில் 10.55 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 7.47 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் 19.98 சதவீதம் முட்டைகளை உற்பத்தி செய்து, தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

வளர்ந்துவரும் பண்ணைத் தொழில்:

தமிழகத்தில் கோழி வளர்ப்பு என்பது, 1975ம் ஆண்டு வாக்கில், விவசாயிகளின் உப தெழிலாளாக ஒரு பண்ணைக்கு 100 முதல் 500 கோழிகள் வரை வளர்க்கப்பட்டு வந்தது. பின்னர் அது படிப்படியாக வளர்ந்து முட்டைக்கோழி வளர்ப்பு என்பது தற்போது பெரிய தெழிலாக வளர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பண்ணையாளர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இந்த தொழிலை நம்பி உள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட நாமக்கல் மண்டலத்தில், சுமார் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. ஒவ்வொரு பண்ணையிலும் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை, சுமார் 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவிலேயே மிகக்குறைந்த பரப்பில், அதிக அளவில் கோழிகள் வளர்ப்பதில் நாமக்கல் மண்டலம் முதலிடம் வகிக்கிறது.

நாமக்கல் எக் சிட்டி:

இந்தியாவின் முட்டை நகரம் (எக் சிட்டி) என்று அழைக்கப்படும், நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணைகள் உயர் தொழில்நுட்ப ஆட்டோமேஷன் முறையில் பண்ணைகள் அமைக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவு ஏற்றுமதி வளர்ச்சி என நவீன மாற்றங்களைச் சந்தித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வெளியான புள்ளி விபரங்களின்படி, இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு 19.98 சதவீதம் பங்களிப்பை அளித்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் 12.91 சதவீதம் மற்றும் தெலுங்கானா 12.32 சதவீதம் பங்களிப்பில் உள்ளன.

முட்டை உற்பத்தியில் முதலிடம்:

தமிழ்நாட்டில் மொத்தமாக வளர்க்கப்படும் முட்டை கோழிகளின் எண்ணிக்கை சுமார் 8.79 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளரும் கோழிகள் (குரோயர்) உட்பட, மாநிலம் முழுவதும் மொத்தம் 10.55 கோடிக்கும் அதிகமான முட்டையினக் கோழிகள், பண்ணைகளில் வளர்க்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது நாமக்கல் மண்டலத்தில் மட்டும் தினசரி சுமார் 7.47 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதனால் தேசிய அளவில் நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

தமிழ்நாட்டில் தனிநபருக்கான முட்டை இருப்பு 2025-ல் ஆண்டில், 317 முட்டைகளாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியான 106 முட்டைகளை விட மிக அதிகமாகும். கடந்த அக்டோபர் 2025 வரை, இந்த ஆண்டில் நாமக்கல்லில் இருந்து சுமார் 139.62 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டின் 78.64 கோடி என்ற எண்ணிக்கையை விட இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளில் இந்திய முட்டை ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உச்சம் தொட்ட முட்டை விலை:

கடந்த 3 மாதங்களாக, இந்தியாவில் ஏற்பட்ட, குளிர்காலத் தேவை மற்றும் உற்பத்தி சுழற்சியில் ஏற்பட்ட சிறிய மாற்றம் கராணமாக, பண்ணை கொள்முதல் விலை ஒரு முட்டைக்கு ரூ. 6.40 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டு, கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது.

நவீனமயமாக்கல், தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் திறனை மேம்படுத்தவும், பெரிய அளவிலான பண்ணைகள் (8 லட்சம் கோழிகள் வரை), ஆட்டேமேட்டிக் தீவனம், குடிநீர் மற்றும் முட்டை சேகரிப்பு முறைகளை பண்ணையாளர்கள் வேகமாகப் பின்பற்றி வருகின்றனர்.

21-வது கால்நடை கணக்கெடுப்பு, அக்டோபர் 2024-ல் தொடங்கப்பட்டது, விரைவில் இது முடிவடைந்து இந்தியாவில் கோழிப்பண்ணைகள் வளர்ச்சி குறித்து துல்லியமான அறிக்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அடிக்கடி தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வு, சோளம் மற்றும் சோயாவின் அதிக விலை போன்றவை பண்ணைகளின் லாபத்தைப் பாதிக்கும் வகையில் சவாலாகத் தொடர்கிறது.

அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அடிக்கடி பரவும் பறவைக்காய்ச்சல் நோயை கருத்தில் கொண்டு, நாமக்கல் மண்டலத்தில், உயிரியல் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் அபாயத்தைக் குறைக்க கால்நடை மருத்துவக்கல்லூரி ஆய்வகங்கள் மூலம் தொடர்ச்சியான நோய் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்துறை படிப்படியாக சர்வதேச தரத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட பண்ணைகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய செலவு அமைப்பின் கீழ், லாபகரமாகச் செயல்பட ஒரு பண்ணையில் குறைந்தபட்சம் 30,000 முதல் 50,000 முட்டையினக் கோழிகள் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top