மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியாருக்கு பட்டா வழங்கியதைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட அமைப்புக்குழு நிர்வாகி பழனிவேலு தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் பாபு, தமிழ்ச்செல்வி, வீரம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட உட்பட்ட ரெட்டி காலனியில், பொதுமக்களுக்காக குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன். ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் தனசேகரன், விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




