Close
மார்ச் 7, 2026 2:51 மணி

போட்டித் தோ்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதோடு, போட்டித் தேர்வுக்கு உதவும் புத்தகங்கள், வினா விடை வங்கிகள் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள், அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர்.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவா்களில் தற்போது வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் 6 மாணவா்களும், குரூப் 2, 2ஏ தோ்வில் 5 மாணவா்களும், தமிழக அரசு சீருடைப் பணியாளா் தோ்வில் 8 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

போட்டித் தோ்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் நினைவு பரிசு வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:

மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், அரசு வேலைவாய்ப்பை பெற முயற்சிக்கும் பட்டதாரிகளுக்காகவும், இளைஞர்கள் தொழில் புரியவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது. மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அரசு சார்பில் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டுவருகிறது.

போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நூலகங்களும், இணையதள வசதிகளும் உள்ளது. எனவே, இந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது கல்வி பயின்று போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற நூலகங்களும், இணையதள வசதிகளும் உள்ளன. அதிலுள்ள குறிப்புகளை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற்று வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் யோகலட்சுமி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்கள் மோகன்ராஜ், விஜயலட்சுமி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top