Close
மார்ச் 7, 2026 9:35 மணி

நாமக்கல்லில் ரூ. 194 கோடி மதிப்பில் பைபாஸ் சாலை திறப்பு: எம்.பி. தகவல்

நாமக்கல் நகரில் திறக்கப்பட உள்ள ரூ. 194 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, பைபாஸ் ரோட்டை, ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் நகரில், 7ம் தேதி ரூ. 194 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, பைபாஸ் ரோட்டை திறந்து வைத்து, புதிய பைபாஸ் ரோட்டிற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார் என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

நாமக்கல் நகரில், முதலைப்பட்டியில் இருந்து வேட்டாம்பாடி, வசந்தபுரம், லத்துவாடி வழியாக வள்ளிபுரம் வரை புதிய ரிங் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வேட்டாம்பாடி – வசந்தபுரம் வரை ரூ.95.12 கோடி மதிப்பீட்டில் பைபாஸ் ரோடு பணிகள் நிறைவுபெற்றுள்ளது.

இந்த ரோடுகள் திறப்பு விழா மற்றும் லத்துவாடி – வள்ளிபுரம் வரை 2 பை பாஸ் ரோடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா  7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நாமக்கல் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., ரோடு அமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாநகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதிய பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என சுமார் 15 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். சேலம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் சேந்தமங்கலம், துறையூர், திருச்சி போன்ற பகுதிகளுக்கு எளிதாக செல்லும் வகையில் புதிய பைபாஸ் ரோடு அமைக்க தமிழக முதல்வர் அனுமதி அளித்தார். புதிய பை பாஸ் ரோடு அமைப்பதற்காக சுமார் 145 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக சேலம் ரோட்டில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக புதிய பேருந்து நிலையம் முதல் சேந்தமங்கலம் ரோடு வரையும், 3-வது கட்டமாக சேந்தமங்கலம் ரோட்டில் இருந்து – திருச்சி மெயின் ரோடு வரையும் ரோடு அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

இந்த ரோட்டை தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  7ம் தேதி திறந்து வைக்க உள்ளார். 3ம் கட்ட பணிக்கு சுமார் 12 கி.மீ நீளத்திற்கு, 2023-ம் ஆண்டு ரூ.194 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி பணிகள் முடிவுற்றுள்ளது.

மேலும் 4-வது கட்டமாக திருச்சி ரோட்டில் இருந்து – மோகனூர் ரோடு வரையும், 5-வது கட்டமாக மோகனூர் ரோட்டில் இருந்து – பரமத்தி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், புதிய ரோடு அமைப்பதற்கான பணிகளுக்கும் நாளை நடைபெறும் விழாவில் அமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார் என அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, டிஆர்ஓ சரவணன், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top