Close
மார்ச் 7, 2026 2:52 மணி

நாமக்கல்லில் ஆட்டோமொபைல் பார்க் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்: எம்.பி. தகவல்

நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்.

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் சங்ககிரி ரயில் நிலையத்தை அறிவித்து நவீனப்படுத்தவும், நாமக்கல்லில் லாரிகள் ஸ்பேர் பார்ட்ஸ் அமைக்கும் ஆட்டோமொபைல் பார்க் அமைக்கவும், லாரிகள் நிறுத்துவதற்கான ஸ்டாண்ட் அமைக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்ப்படும் என மாதேஸ்வரன் எம்.பி. கூறினார்.

நாமக்கல் மக்களவை கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வரும் 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில், எத்தனை முனைபோட்டிகள் வந்தாலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று, மீண்டும் ஸ்டாலினை முதல்வராக அமர்த்துவோம்.

மத்திய அரசு சமீபத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், அதன் செயல்பாடுகளை முழுமையாக முடக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. பாஜ கூட்டணியில் இருப்பதால் அதிமுக, இந்த திட்டத்தை ஆதரிப்பது நல்லதல்ல. வரும் தேர்தலில் வாக்குகள் மூலம் வாக்காளர்கள் பாஜவை விரட்டியடிப்பார்கள்.

தமிழகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் திமுக சிறந்த ஆட்சி கொடுத்துள்ளார்கள். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளித்தால் பிற மாநிலங்களைப் போல பல்வேறு பிரச்னைகள் வந்துவிடும். கொங்கு மண்டலத்தில் இருக்கின்ற அனைத்து தொகுதிகளும் வெற்றி பெறுவதற்கு, எங்கள் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற தயாராக உள்ளார்கள் என்றார்.

மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில், காவிரியின் குறுக்கே தடுப்பணை, சேலத்தில் இருந்து நாமக்கல்-வள்ளிபுரம் வரை முழுமையாக 6 வழிச்சாலைகள் அமைத்தல், விபத்து பகுதியாக அறிவிக்கப்பட்ட கருங்கல்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி போன்றவற்றிற்கு, வரும் பிப்ரவரி மாதம் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட உள்ளது.

அதேபோல பெருமாள்கோயில் மேடு, புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். முழுமையாக 6 வழிச்சாலைகள் வரும்போது, மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு விடும்.

நாமக்கல் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் அறிவித்து, நவீனப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

நாமக்கல்லில் லாரிகளின் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் ஆட்டோமொபைல் பார்க் அமைக்கவும், லாரிகள் நிறுத்துவதற்கான லாரி நிறுத்துமிடம் அமைக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றித் தரப்படும் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top