Close
மார்ச் 7, 2026 4:24 மணி

அறநிலையத்துறையில் இருந்து இந்து கோயில்களை விடுவிப்பதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே ஓட்டு: விஎச்பி இணை பொதுச்செயலாளர்

நாமக்கல்லில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டத்தில், அதன் இணைப் பொதுச் செயலாளர் ஸ்தானுமாலயன் பேசினார்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை விடுவிப்பதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே, வருகிற சட்டசபை தேர்தலில் இந்துக்கள் ஓட்டுப்போட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக விஎச்பி இணை பொதுச்செயலார் ஸ்தானுமாலயன் கூறினார்.

விசுவ ஹிந்து பரிஷத் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் 2 நாட்கள் நடைபெற்றது. விஎச்பி மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட தமிழக அமைப்பு செயலாளர் ராமன், வட தமிழக பொதுச்செயலாளர் பால மணிமாறன், மாநில பொருளாளர் தாமோதரன், மாநில தர்ம பிரச்சார் அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில உலக இணைப்பொதுச் செயலாளர்கள் ஸ்தானுமாலயன், நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.

நிகழ்ச்சி முடிவில் விஎச்பி அகில உலக இணைப்பொது செயலாளர் ஸ்தானுமாலயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலக அளவில் 17 நாடுகளில் விஎச்பி அந்த நாட்டு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. 21 நாடுகளில் விஎச்பி கிளை அலுவலகங்கள் உள்ளன.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்துக்களிடையே எழுச்சி குறைவாக இருப்பதால் இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன. சிறுபான்மையினர் நலனுக்காக, பெரும்பான்மையான இந்துகள் புறக்கனிக்கப்படுகின்றனர். இதை மாற்றி இந்துக்களிடையே எழுச்சியை ஏற்படுத்த விஎச்பி பாடுபட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியும், தீபம் ஏற்ற தடை விதித்து வரும் தமிழக அரசையும், இந்த சமய அறநிலையத்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் இது சம்மந்தமாக நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து, தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளது. தமிழகத்தில் கோயில் சம்மந்தமான கட்டிடம் கட்டினால் உரிய வரைபடத்தை சமர்ப்பித்து உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி மற்ற மதத்தினருக்கு சலுகை வழங்கியுள்ளதை மத நல்லிணக்கம்கருதி திரும்பிப்பெற வேண்டும்.

தமிழகத்தில் மதுவால் பள்ளி மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் குடும்பங்களில் பிரிவினை மற்றும் தற்கொலைகளும் நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

இந்து கலாச்சாரத்தின் அடிப்படையாக இந்து கோயில்கள் உள்ளன. நமது முன்னோர்கள் மற்றும் மகாராஜக்கள் கட்டிக்கொடுத்த அந்த கோயில்களுக்கு, பொதுமக்கள் ஏராளமான பணத்தை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இதன் நோக்கம் அந்த பணம் பக்தர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்கள் அதிகாரிகளால் நிர்வாகம் செய்யப்பட்டு பக்தர்களின் பணத்தை தங்கள் சொந்த பணம் போல் செலவழிக்கின்றனர். பல கோயில்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. வருவாய் உள்ள கோயில்களின் பணத்தை எடுத்து நலிவடைந்த நிலையில் உள்ள கோயில்களை பராமரிப்பதில்லை.

எனவே தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை ஆன்மீக பெரியோர்கள், மடாதிபதிகள், துறவிகள், ஜீயர்கள், ஆதீனங்கள் உள்ளடக்கிய நிர்வாக கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும். வரக்கூடிய சட்டசபை தேர்தலில் இந்து கோயில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே இந்துக்கள் வாக்களிக்க வேண்டும். இதை வலியுறுத்தி கிராமம் தோறும் விஎச்பி சார்பில் பிரச்சாரம் செய்யப்படும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 48, பசு மற்றும் பிற மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில் நாட்டுப்பசு மற்றும் காளைகளை வதை செய்யப்படுவதற்கு தமிழக அரசு தடை சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top