Close
மார்ச் 7, 2026 4:40 மணி

நாமக்கல்லில் இன்று அதிகாலை 2 சரக்கு வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

நாமக்கல்லில் நகரில் இன்று அதிகாலை இரண்டு சரக்கு வாகனங்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில், வாகனங்களின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

நாமக்கல் நகரில் இன்று 27ம் தேதி அதிகாலை, லாரியுடன் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி பிக்அப் சரக்கு வாகனம் ஒன்று சாக்கு மூட்டை பாரம் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.

இன்று அதிகாலை 6 மணியளவில், நாமக்கல் நகரில் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அப்போது, மேம்பாலத்தின் ஒரு பக்கத்தில் டூ வீலரில் வந்த 3 பேர் மீது சரக்கு வாகனங்கள் மோதியதால், டூ வீலரில் வந்த நாமக்கல் இந்திரா ஜெய்நகரைச் சேர்ந்த கார்த்திக், இந்திரா நகரைச் சேர்ந்த சேனாதிபதி ஆகிய 2 பேரும், கார்நாடகாவைச் சேர்ந்த பிக் அப் சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் உசேன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லாரி டிரைவர் மற்றும் டூ வீலரில் வந்த ஒருவர் என 2 பேர் பலத்த காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி, ஏடிஎஸ்பி விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேம்பாலத்தில் வானகங்கள் மோதிக்கொண்டதால், சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிரேன் உதவியுடன் சரக்கு வாகனங்கள் அகற்றப்பட்டன. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top