Close
மார்ச் 7, 2026 11:29 காலை

பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இறுதியாண்டு மாணவி செல்வி திவ்யதர்ஷினி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்திற்குட்பட்ட சுப்புலாபுரம் கிராமத்தில் காய்கறி மற்றும் பிற பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்காக பஞ்சகவ்யா தயாரிப்பு, பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவான பயிற்சி மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த பயிற்சியில், பஞ்சகவ்யா என்பது பசுவில் இருந்து பெறப்படும் ஐந்து முக்கிய பொருட்களான மாட்டுச் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றுடன், நாட்டு சர்க்கரை, வாழைப்பழம், இளநீர், தண்ணீர் போன்ற இயற்கை மூலப்பொருட்களை இணைத்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி என விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. இது பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதாகும்.

பஞ்சகவ்யா தயாரிக்க தேவையான பொருட்கள் (தோராயமான அளவு):

  • மாட்டுச் சாணம் – 7 கிலோ
  • மாட்டு நெய் – 1 கிலோ
  • மாட்டுச் சிறுநீர் (கோமியம்) – 3 லிட்டர்
  • பால் – 2 லிட்டர்
  • தயிர் – 2 லிட்டர்
  • நாட்டு சர்க்கரை – 1 கிலோ (அல்லது கரும்புச்சாறு 2 லிட்டர்)
  • வாழைப்பழம் – 12 (நன்கு பிசைந்தது)
  • இளநீர் – 2 லிட்டர்
  • தண்ணீர் – 3 லிட்டர்

தயாரிக்கும் முறை:
முதல் நாளில், ஒரு மண் பானையில் 7 கிலோ மாட்டுச் சாணத்தையும், 1 கிலோ நெய்யையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

இந்த கலவையை காலை மற்றும் மாலை என இரு வேளையும் தொடர்ந்து மூன்று நாட்கள் கலக்கி வைக்க வேண்டும்.

நான்காம் நாளில், அதில் பால், தயிர், பிசைந்த வாழைப்பழம், இளநீர், தண்ணீர் மற்றும் நாட்டு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

பின்னர் பானையை துணியால் மூடி, நிழலில் வைத்து தினமும் காலையும் மாலையும் கலக்கி பராமரிக்க வேண்டும். 7 முதல் 15 நாட்களுக்குள் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.

பயன்பாடு மற்றும் நன்மைகள்:

பஞ்சகவ்யா பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்பட்டு, மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. பயிர்களில் பூக்கும் மற்றும் காய்ப்புத் திறன் மேம்படுவதுடன், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைகிறது.

மேலும், இதனை விதை நேர்த்தி செய்ய (ஒரு கிலோ விதைக்கு 200 மில்லி), தெளிப்பு மற்றும் மண் வழி பயன்பாடு போன்ற முறைகளில் பயன்படுத்தலாம்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களின் சந்தேகங்களை முன்வைத்து விளக்கம் பெற்றனர்.

இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் இந்த செயல்விளக்கப் பயிற்சி அமைந்ததுடன், விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top