மதுரை, திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியில் குரங்குகள் அதிகளவு சுற்றித் திரிகின்றன. அந்த மலைப் பகுதிகளில் பல உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில், குரங்குகளும் உணவின்றி வயிறு காய்ந்து திரிகின்றன. உணவைத் தேடி அங்குமிங்கும் ஓடித் திரியும் குரங்குகள், அவ்வப்போது ஒன்றுக்கு ஒன்று அடித்து கொண்டும், வாகன விபத்துகளில் சிக்குவதும் தொடர்கதையாக உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு வாகனத்தில் அடிபட்ட குரங்கு ஒன்றுக்கு உடல் காயம் ஏற்பட்டு மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்குள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் வன பாதுகாப்பு காவலர் ராம் குமார் உயிரிழந்த குரங்கை அடக்கம் செய்துள்ளனர்.
அந்த பகுதிகளில் அடிக்கடி குரங்குகள் உயிரிழப்பு அதிகம் காணப்பட்டு வருகிறது. குரங்குகள் ஒன்றுக்கு ஒன்று கடித்து குதறியதில் அடிபட்ட ஆண் குரங்கு ஒன்றுக்கு இரண்டு கால்கள் சிதைந்து, எலும்பு வெளியே தெரிந்தது.
இதனை அறிந்த திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் தீபன், பதறிப் போய் காவலர் ராம்குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அறிந்த ராம்குமார் உடனடியாக அங்கு வந்து காயத்துடன் கிடந்த குரங்கை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மயக்க நிலையில், இருந்த குரங்குகளுக்கு உடனடியாக தண்ணீர் அளித்து உரிய சிகிச்சை அளித்தனர்.
அந்தக் குரங்கும் உதவி செய்ய வந்த ராம்குமாரை தெரிந்து கொண்டு நன்றி கூறிய வீடியோ காண்போரை நெகிழ்ச்சியை அடைய வைத்தது. மற்ற குரங்குகள் காவலர் ராம்குமாரை நோக்கி கடிக்க வந்தது. பின்னர் ராம்குமார் குரங்குக்கு சிகிச்சை அளிப்பதை கண்டு அறிந்து, குரங்குகள் மரத்தில் ஏறி சென்று பார்த்துக் கொண்டிருந்தது.
மேலும், மரண வேதனையோடு, உணவைத் தேடியும் அலையும் அந்த குரங்கை பார்க்கும் பொதுமக்கள் பரிதாபப்பட்டாலும், சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளரை சந்தித்து கைத்தறி நகர் சமூக ஆர்வலர் ராஜன் பேசுகையில்,
இதுபோல், ஆபத்தான நிலையில், விபத்தில் காணப்படுகின்ற குரங்குகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். மயில்களும் விபத்தில் உயிரிழந்த காணப்படுகின்றன. குரங்குகள் மயில்கள் உயிரிழிப்பு ஏற்பட்டு இனங்கள் அழிந்து விடும் சூழ்நிலை உள்ளது.
இதனால், வனத்துறையினர் விபத்தில் ஏற்படும் குரங்குகளை பிடித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.




