Close
ஏப்ரல் 24, 2026 2:18 காலை

நாமக்கல் மாநகராட்சியில் நாய் தொல்லையா ? புகார் அளிக்க டோல்ஃப்ரீ நம்பர் வெளியீடு

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், நாய்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநகர நல அலுவலர் கஸ்தூரிபாய் பேசினார்.

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் தெருநாய் தொல்லை இருந்தால் புகார் செய்ய டேல்ஃப்ரீ டெலிபோன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், பஸ் டிப்போக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சமீபத்தில் உச்சநீதிமன்றம் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அவற்றை நாமக்கல் மாநகராட்சி பகுதியில் அமல்படுத்துவது தொடர்பாக, கல்விநிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், காம்ப்ளக்ஸ்கள், பேருந்து நிலையங்கள், அரசு நிறுவனங்கள் போன்ற பகுதிகளில் நாய்க்கடி அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பொதுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தெருநாய்களை நிர்வகித்தல் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மாநகராட்சி சார்பில் நாய்கள் பாதுகாப்பு அமைப்பகம் (ஏபிசி சென்டர்) அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டது.

மேலும் பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள பகுதியில் தெரு நாய்கள் நுழையாமல் அல்லது வசிக்காமல் பார்த்துக்கொள்ள சுற்று சுவர்கள், வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளிலும், நாய்கள் கடித்தால் முதலுதவி மற்றும் உடனடியாக புகார் அளிக்கும் நெறிமுறைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மைதானங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்களில் தெருநாய்கள் நுழைவதையோ, அல்லது வசிப்பதையோ தடுக்க 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

விலங்குகளை ஈர்க்கும் உணவு ஆதாரங்களை அகற்ற முறையான கழிவு மேலாண்மை அமைப்புகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

மாநகராட்சி சார்பாக, தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தெரு நாய்களின் மூலம் ஏதேனும் தொந்தரவு இருந்தால், மாநகராட்சியின் அலுவலக உதவி எண் 18005997990 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநகர நல அலுவலர் கஸ்தூரிபாய், சுகாதார அலுவலர் திருமூர்த்தி, ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன். துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கரன், ஜான் ராஜா, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top