தமிழகத்தின் அதிநவீன ஆட்டோமேட்டிக் ஆவின் பால் பண்ணையை, தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்சில் திறந்து வைத்தார். தொடர்ந்து, ராஜேஷ்குமார், எம்.பி., குத்துவிளக்கேற்றி உற்பத்தியை துவக்கி வைத்தார்.
நாமக்கல்லில் ரூ. 90 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, தமிழகத்தின் ஆவின் பால் பண்ணையை, சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து பால் பண்ணையில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார்.
எம்எல்ஏ ராமலிங்கம், மாநகர மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி. குத்து விளக்கேற்றி ஆலையின் உற்பத்தியை துவக்கி வைத்துப் பேசியதாவது:
திமுக ஆட்சியில், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் 2ஆக பிரிக்கப்பட்டு, நாமக்கல் ஆவின் தனியாக துவக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நாமக்கல் ஆவினுக்காக, அதிநவீன பால்பண்ணை ரூ. 90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பால் பண்ணை நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்டது. மாநிலஅளவில் முதலாவதாக, ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, அதிநவீன ஆட்டேமேட்டிக் இயந்திரம் மூலம், இங்கு நாள் ஒன்றுக்கு தேயைபன பால் பாக்கெட்டுகள், 10 ஆயிரம் லிட்டர் தயிர், 1,000 கிலோ வெண்ணெய் மற்றும் 200 கிலோ பால் கோவா உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதன் மூலம் ஒரு லிட்டர் பாலுக்கு சேலம் ஆவினுக்கு செலுத்தப்பட்டு வந்த ரூ. 3.50, நாமக்கல் ஆவினுக்கு கூடுதல் லாபமாக கிடைக்கும். நாமக்கல் ஆவின் பால் பண்ணை மூலம் 15 ஆயிரம பால் உற்பத்தியாளர்கள் கூடுதல் போனஸ் பெறுவார்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கி தனியாக பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தற்போது, ரூ. 2 ஆயிரம் கோடி டெபாசிட்டுன், தனியாக செயல்பட்டு வருகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும், நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள போதமலைக்கு ரோடு வசதி இல்லாததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று போதமலைக்கு ரூ 94 கோடி மதிப்பில் புதிய மலைப்பாதை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்நது பணிகள் துவக்கப்பட்டு இதுவரை ரூ. 34.12 கோடி மதிப்பில் புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.90 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளன. அந்த மலைப்பாதையை நாளை தமிழக முதல்வர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க உள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.




