சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில், தேசிய நெடுஞ்சாலை அருகில் தமிழ்நாடு அரசு சார்பில், ரூ 3.40 கோடி மதிப்பீட்டில் அவருக்கு மார்பளவு சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
வருகிற 13ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து இந்த நினைவு அரங்கத்தை வீடியோ கான்பரன்சில் திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி டாக்டர் சுப்பராயன் நினைவு அரங்கத்தை, ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், அரசுத் துறை அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாகாணத்தில் 1926 முதல் 1930 ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் முதலமைச்சராக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பராயன் பணியாற்றினார். அவர் சென்னை மாகாணத்தின் முதல் சுயேசசை முதலமைச்சர் ஆவார்.
சமூகநீதி, இடஒதுக்கீடு போன்ற அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த அயராது உழைத்த தலைவராக அவர் வரலாற்றில் போற்றப்படுகிறார். அவரது புகழை போற்றும் வகையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் டாக்டர் சுப்பராயனுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.
அதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் ரூ. 3.40 கோடி ரூபாய் மதிப்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், சுப்பராயனின் மார்பளவு சிலையுடன் கூடி நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
வருகின்ற 13-ம் தேதி, முதலமைச்சர் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் இந்த மண்டபத்தை திறந்து வைக்க உள்ளார் என அவர் கூறினார்.
இந்த நிகழ்சசியில் நாமக்கல் மாவட்ட பிஆர்ஓ ராம்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




