Close
மார்ச் 7, 2026 12:07 மணி

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு பள்ளியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முன்னாள் மாணவர்கள்: ஆசிரியருக்குக் கௌரவம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் (முன்னர் உயர்நிலைப்பள்ளி), 1997-98ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள், சமூக வலைதளம் வாயிலாக ஒன்றிணைந்து நெகிழ்ச்சியான சந்திப்பை நிகழ்த்தினர்.

தங்களுக்குப் பாடம் கற்பித்த முன்னாள் ஆசிரியர் பன்னீர்செல்வம் அவர்களுக்குச் சால்வை மற்றும் மாலை அணிவித்து மாணவர்கள் மரியாதை செய்தனர். அவரிடம் ஆசி பெற்றதோடு, தங்களின் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பள்ளிப் பருவத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் சேட்டைகளை நினைவுகூர்ந்த மாணவர்கள், பள்ளி முடித்த பிறகு தாங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்த பயணத்தைப் பற்றி உரையாடினர்.

தாங்கள் படித்த பள்ளி தற்போது மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டிருப்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டனர். பள்ளியின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக உறுதி பூண்டனர்.

தற்போது இந்த முன்னாள் மாணவர்கள் சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் உயரிய பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். “எங்கள் வெற்றிக்கு அடித்தளம் இட்ட ஆசிரியர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். விரைவில் குடும்பத்துடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்தி, தற்போது பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்வோம்” என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வின் இறுதியில் ஆசிரியரை முன்னால் நடக்க விட்டு, மாணவர்கள் பின்னால் சென்றது பார்ப்பதற்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இது இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீதான மரியாதையை உணர்த்தும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top