நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும், 2,664 தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கூறினார்.
தமிழகம் முழுவதும் உள்ள, மாநகராட்சி, நகராட்சி மற்றும் டவுன் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா, மாநகராட்சி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தினை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியாதவது:
தமிழக முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் 860 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ. 1.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் மூலம் மாநகராட்சியில் உள்ள 28 இடங்களில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உழவு வழங்கப்படும். மேலும், மதிய உணவு 98 பணியாளர்களுக்கும், இரவு உணவு 17 பணியாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
இதற்கான சோதனை நிகழ்வு கடந்த டிச. 20ல் துவங்கி, பிப். 7 வரை 50 நாட்கள் நடத்தப்பட்டது. அப்போது நாளொன்றுக்கு 5 இடங்களில் மொத்தம் 9,720 தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டத.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் உள்ள 919 தூய்மைப்பணியாளர்கள், 19 பேரூராட்சிகளில் உள்ள 925 தூய்மைப்பணியாளர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 2,664 தூய்மை பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், கவுன்சிலர் ஜெயமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




