நாமக்கல் அருகே முறைகேடான முறையில் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து சிப்காட் எதிர்ப்பு குழுவின் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அரசு உத்தரவில் பல விவசாயிகளுடைய நிலங்களின் உண்மை தன்மை மறைக்கப்பட்டுள்ளது.
சிப்காட் நில எடுப்பு சட்டப்படி நிலங்களை கையகப்படுத்தும் முன்பு விவசாயிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதற்காக விவசாயிகளிடமிருந்து முன்னாள் சிப்காட் டிஆர்ஓ ஆட்சேபனை மனுக்களை பெற்றார்.
அதேபோல மோகனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஆட்சேபனை மனு வாங்கினார்கள். இந்த மனுக்களை முறைப்படி நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பவில்லை.
அந்த ஆவணங்கள் குறித்து, ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்டதில், ஆவணங்கள் அனைத்தும் கோர்த்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பதில் கொடுத்துள்ளனர்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அனுப்பாத நிலையில், அவர் எவ்வாறு நிலம் கையகப்படுத்த உத்தரவு பிறப்பிக்க முடியும்.
எனவே இந்த விஷயத்தில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இது குறித்து சிபிசிஐடி விசாரைணக்கு உத்தரவிட, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




