Close
மார்ச் 7, 2026 2:51 மணி

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கிய ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை,   இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ்,  வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை,  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை,  உதவி உபகரணங்கள், சாலை வசதி,  வேளாண் பயிா்க் கடன், தாட்கோ, கடனுதவி, புதிய நீா்த் தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, தானசெட்டில்மென்ட் ரத்து,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 861  மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக  நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

இதைத் தொடா்ந்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, அனைத்து அரசு அலுவலா்களும் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம், திருவண்ணாமலை மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் வந்தாவாசி வட்டம், தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த  டிச. 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இளைஞா் இலக்கிய திருவிழாவில் பேச்சுப் போட்டி, நூல்அறிமுகப் போட்டி, இலக்கிய விநாடி வினா போட்டி, ஓவியப் போட்டி, விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், ஆட்சியா் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ்குமாா், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சதீஷ் குமாா், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பட்டா தொடா்பான மனுக்கள், கணினி திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், நலிந்தோா் உதவித்தொகை, பட்டா ரத்து, இலவச வீடு கேட்டு, நெற்களம் அமைக்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 65 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை பெற்ற கோட்டாட்சியா் சிவா, அவற்றை அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top