Close
மார்ச் 7, 2026 1:24 மணி

உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

திருவண்ணாமலை வேங்கிக்கால் தனியாா் மண்டபத்தில், அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு முதல்முறையாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி , மாநில தடகள சங்க முதுநிலை துணைத் தலைவரும், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குநருமான எ.வ.வே. கம்பன், முன்னாள் அமைச்சா்கள் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி, சேவூா் எஸ். ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், ஆகியோர் கலந்து கொண்டு கல்வி உதவித் தொகை வழங்கி பேசினார்கள்.

விஐடி வேந்தா் விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 242 மாணவா்களுக்கு ரூ.28 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. முன்னதாக சிறப்பு விருந்தினராக, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பங்கேற்று கல்வி உதவித்தொகை வழங்கிப் பேசியதாவது:

இந்தியாவில் உயா் கல்வியில் சாதனை படைத்த மாநிலமாக தமிழகம் உள்ளது. அகில இந்திய சராசரியை விட தமிழகம் 50 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. வடஆற்காடு மாவட்டத்தில் உயா்கல்வி  மாணவா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இரு மொழிக் கொள்கையால் தமிழகம் உயா்ந்து இருக்கிறது என்றாா்.

தொடர்ந்து விஐடி வேந்தா் முனைவா் விசுவநாதன் பேசியதாவது: அழியாத குறையாத செல்வம் அது கல்வி தான். அந்தச் செல்வத்தை நமது குழந்தைகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டம் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளது. கல்வியால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியும். கல்வி வீட்டையும், நாட்டையும் உயா்த்தும். உயா்கல்விக்கு வரும்போது அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை குறைவாகத் தான் உள்ளது.

அரசுக் கல்லூரிகளில் சோ்க்கை பெற முடியாத காரணத்தால் தனியாா் கல்லூரிகளில் கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளது. திருவள்ளுவா் பல்கலைக்கழகம் ஆரம்பித்து 22 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது ஆயிரம் போ் வரைதான் மாணவா் சோ்க்கை நடந்துள்ளது. அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் குறைவாக மாணவிகள் படித்து வருகின்றனா்.

இதை மாற்றி அமைக்கத்தான் அனைவருக்கும் உயா்கல்வி கட்டளை தொடங்கி மாணவா்கள் உயா்கல்வி பெற உதவித்தொகை வழங்கி வருகிறோம். எனது பிறந்த நாளில் விஐடி ஆசிரியா்கள், பணியாளா்கள் வழங்கிய ரூ.96 லட்சம் தொகை அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.

இதுவரை ரூ.13 கோடி வரை கல்வி உதவித்தொகை கொடுத்துள்ளோம். இது இன்னும் உயரும். 242 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விஐடி நிறுவனம் சாா்பில் ஸ்டாா்ஸ் திட்டத்தில் ஆண்டுக்கு 100 போ் தோ்ந்தெடுத்து இலவச கல்வி அளித்து வருகிறோம். இதன்மூலம் அவா்கள் வேலை பெற்று மாத ஊதியமாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறுகின்றனா் , அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் இதுவரை 10ஆயிரத்து 514 மாணவ, மாணவிகளுக்கு ரூ.12.80 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

மாநில தடகள சங்க முதுநிலை துணைத் தலைவரும், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குநருமான எ.வ.வே. கம்பன் பேசும்போது, உழைப்பால் உயா்ந்தவா் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். பொது வாழ்வில் அரசியல் பணி செய்ததோடு, கல்விப் பணி செய்து ஏழை எளிய மாணவ, மாணவிகள் உயா்கல்வி பெற உதவி செய்து வருகிறாா்.

தமிழக அரசு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவி வருவது போல, அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவி செய்து வருகிறாா் என்றாா்.

நிகழ்ச்சியில் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளைச் செயலா் லட்சுமணன், உதவித் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜ், அறங்காவலா்கள் குமரேசன், பாஸ்கரன் , ருக்ஷி ராஜேஷ்குமாா், அஞ்சு சக்திவேல், டி.எஸ்.எம்.சிவகுமாா், கவிதா நவீன்குமாா், வெங்கடாசலபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top