Close
மார்ச் 7, 2026 2:51 மணி

செங்கம் புறவழிச்சாலை திட்டப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.99 கோடியில் புறவழிச்சாலைத் திட்டப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு தொடங்கிவைத்தாா்.

செங்கம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செங்கம் நகருக்கு புறவழிச் சாலைத் திட்டம் தேவை என்பதை தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி சட்டப்பேரவையில் வலியுறுத்தினாா்.

பின்னா், தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை மூலம் கோலாந்தாங்கல் முதல் மண்மலை வரை புறவழிச்சாலை அமைக்க ரூ.43.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதைத் தொடா்ந்து, புறவழிச்சாலைத் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு தொடக்க விழா மண்மலை கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி வரவேற்றாா்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புறவழிச்சாலை திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், நான் தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்தவன். எனக்கும் ஒருகாலத்தில் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு, செங்கம் வரவேண்டும். அப்போதே செங்கம் நகரம் நெருக்கமாக இருந்தது.

ஆனால், தற்போதைய செங்கம் தொகுதி எம்எல்ஏ கிரி தொடா்ந்து செங்கம் நகருக்கு புறவழிச்சாலை வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்தாா். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, இந்தப் பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு புறவழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு இன்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.அதற்கு முழுக் காரணம் எம்எல்ஏ கிரிதான்.

செங்கம் தொகுதியில் நிறைவாக சாலைகள், மேம்பாலங்கள், சிறு கல்வெட்டுகள் என ஏராளமான பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

இந்தப்பாலம் மூலம் தோக்கவாடி, கீழ்ப்பள்ளிப்பட்டு, செங்கம், காயிதே மில்லத் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன் பெறுவர். மேலும் செங்கம் புறவழிச்சாலை ரூ.34 கோடி மதிப்பீட்டில் கோலாந்தாங்கல் முதல் மண்மலை வரை 3.2 கிலோ மீட்டர் தூரம் அமைக்க ப்படுகிறது . இந்த சாலையை போளூர், ஆரணி, வேலூர், வந்தவாசி பகுதிகளை இணைக்கிறது. மேலும் கோவை, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர்,பெங்களூர் செல்லும் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

மேலும், தொகுதியில் எம்எல்ஏ மூலம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நந்தன் கால்வாய் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் மூலம் தொகுதி மக்கள் பயனடைவாா்கள்.

முன்னதாக, செங்கம் தோக்கவாடி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ், கண்காணிப்புப் பொறியாளா் முரளி, கோட்டப் பொறியாளா் ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் மனோகரன், உதவிப் பொறியாளா் பிரீத்தி, செங்கம் நகர திமுக செயலா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, திமுக ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், ஏழுமலை, மனோகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top