பிளஸ் 2 பொது தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நேரடி நியனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு, தற்போது பணியில் சேர்ந்துள்ள 1,700 முதுகலை ஆசிரியர்களுக்கு இன்று 18ம் தேதி ஒருநாள் சென்னையில் பயிற்சியும், அதனைத் தொடர்ந்து வரும் 23 முதல் 28ம் தேதி வரை ஒவ்வொரு பாடத்திற்கும் 3 நாட்கள் என கற்றல் கற்பித்தல் பயிற்சி மற்றும் அடிப்படை நிர்வாக பயிற்சிகள் பாட வாரியாக சென்னை, வேலூர், சேலம், கன்னியாகுமரி, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மண்டல அளவில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி ஒவ்வொரு பாடத்திற்கும் 4 நாட்கள் நடைபெறுவதால், இதில் முதுகலை ஆசிரியர்கள் அவசியம் 100 சதவீதம் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பது சரியானது தான் என்றாலும், இன்னும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 13 நாட்களே உள்ள நிலையில், புதிதாக பணியில் சேர்ந்த ஆயிரக்கணக்கான முதுகலை ஆசிரியர்கள், அடுத்து வரக்கூடிய இந்த 13 நாட்களிலும் தங்களிடம் படிக்கும் 12 ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும், அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கும் உரிய பயிற்சியை அளிக்க முக்கியமான நாட்களாக உள்ளன.
எனவே வரக்கூடிய 13 நாட்களிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளை அவர்கள் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் இந்த பயிற்சியை தேர்வுகள் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும்.
மேலும், தாய்மை அடைந்துள்ள மற்றும் குழந்தை பெற்றுள்ள முதுகலை பெண் ஆசிரியர்களுக்கும், மாற்றுதிறனாளி ஆசிரியர்களுக்கும், உடல்நலக்குறைபாடு உள்ள ஆசிரியர்களுக்கும் இந்த பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




