சந்திர கிரகணத்தையொட்டி, இன்று மதியம், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், ரங்கநாதர் கோயில்களில் நடை சாத்தப்பட்டது. நாளை மார்ச் 4 காலை, வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாமக்கல் நகரின் மத்தியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி, சாந்த சொரூபியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இன்று 3ம் தேதி மதியம் 3:20 மணி முதல், மாலை 6:20 வரை, சந்திர கிரகணம் நிகழ்கிறது. காலை 9:00 மணிக்கு வழக்கம்போல் வடமாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் உச்சி காலை பூஜைக்காக மஞ்சள் பட்டு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, பகல், 1:30 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
நாளை மார்ச் 4 வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு, பரிகார பூஜைகளுக்குப் பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதேபோல், நரசிம்மர் கோயில், ரங்கநாதர் கோயிலும் நடை சாத்தப்பட்டது.
மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில், இன்று காலை 8:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. வழக்கமாக மதியம் 1:00 முதல் 2:00 மணி வரை நடக்கக்கூடிய திரிசதி அர்ச்சனை, சந்திர கிரகணத்தையொட்டி, காலை 6:00 முதல் 7:00 மணிக்குள் செவ்வாய் ஓரையில் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. நாளை மார்ச், 4 காலை, வழக்கம் போல், கோவில் நடை திறக்கப்படும் என, கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




