Close
மார்ச் 7, 2026 1:25 மணி

ஈரான் போர் எதிரொலி: நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி பாதிப்பு

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள குடோன்களில் சுமார் 3 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் முட்டை விலை ஒரே நாளில் 30 பைசா குறைந்துள்ளது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தவிர, நாமக்கல் மண்டலத்தில் இருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டைகள் பெரும்பாலும் துபாய், குவைத், கத்தார், ஓமன், பக்ரைன் மற்றும் ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல்களில் கண்டெய்னர் மூலம் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இச்சூழலில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. குவைத், துபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் மற்றும் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. பல வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக கண்டெய்னர்களில் ஏற்றப்பட்ட முட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் கவலையைடைந்துள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் கேசவன் கூறியதாவது: அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக முட்டை ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. துபாய் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதால் அங்குள்ள ஜெபல் அலி துறைமுகத்தில் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் விமானம் மூலம் முட்டை அனுப்பும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் டாலராக இருந்த கட்டணம் 6 ஆயிரம் டாலர் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாமக்கல்லில் உள்ள குடோன்களில் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் வரை தேங்கியுள்ளன. இவை அனைத்தும் ஏற்றுமதிக்கு தயாரான நிலையில் உள்ள முட்டைகளாகும். போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே மீண்டும் ஏற்றுமதி துவங்கும் வாய்ப்புள்ளது என்று கூறினார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் முட்டை ஏற்றுமதி அதிகரித்ததால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டல கூட்டம் அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 460 பைசாக்களாக இருந்த முட்டை விலை, ஒரே நாளில் 30 பைசாகள் குறைக்கப்பட்டு 430 பைசாவாகக நிர்ணயிக்கப்பட்டது.

நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்: சென்னை 500, பர்வாலா 420, பெங்களூரு 510, டெல்லி 475, ஹைதராபாத் 450, மும்பை 510, மைசூரு 510, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 450, கொல்கத்தா 510.
கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.128 என அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.62 என சிகா நிர்ணயித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top