Close
ஏப்ரல் 24, 2026 12:49 காலை

பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகல்?

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் பீகாரில் நீண்ட காலத்திற்குப் பிறகு பாஜகவைச் சேர்ந்த ஒரு தலைவர் முதலமைச்சராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பீகாரில் காலியாக உள்ள ஐந்து ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 5-ம் தேதி கடைசி நாளாகும். ஜேடியு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, நிதிஷ் குமார் ராஜ்யசபா வேட்பாளராகக் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்கான வேட்புமனுத் தயார் நிலையில் இருப்பதாகவும், அவர் மார்ச் 5-ம் தேதி மனுத்தாக்கல் செய்வார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

75 வயதாகும் நிதிஷ் குமார், இதுவரை பீகார் சட்டப்பேரவை உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர் மற்றும் லோக்சபா உறுப்பினர் என மூன்று அவைகளிலும் பணியாற்றியுள்ளார். இப்போது ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்த மிகச் சில தலைவர்களில் ஒருவராக அவர் சாதனை படைப்பார்.

நிதிஷ் குமார் டெல்லி அரசியலுக்குச் செல்வதைத் தொடர்ந்து, பீகாரில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பீகார் சட்டப்பேரவையில் பாஜகவே மிகப்பெரிய கட்சியாக இருப்பதால், பாஜக சார்பில் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க அந்தக் கட்சி உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமார் மார்ச் 16-ம் தேதி தேர்தல் முடிந்த பிறகு முறைப்படி தனது பதவியை ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது.

நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. அவர் பீகாரின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. “மாநில இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் விருப்பப்படி நிஷாந்த் குமார் விரைவில் அரசியலில் இணைவார்” என்று ஜேடியு அமைச்சர் ஷரவன் குமார் தெரிவித்துள்ளார்.

2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 89 இடங்களையும், ஜேடியு 85 இடங்களையும் வென்றன. நீண்ட நாட்களாக நிதிஷ் குமாரை மையமாக வைத்தே நகர்ந்த பீகார் அரசியல், இப்போது டெல்லியை நோக்கித் திரும்பியுள்ளது. ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பீகாரில் நிகழ்ந்து வரும் இந்த அரசியல் நகர்வுகள்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top