நாமக்கல் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி துவங்க உள்ள 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பணியாற்றும் 1,300 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில், வரும், 11ல் துவங்கி, ஏப். 6 வரை 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதும், 8 லட்சத்து 7 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், 92 மையங்களில் நடக்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 9,817 மாணவர்கள், 8,851 மாணவியர் என மொத்தம் 18,668 பேர் பங்கேற்கின்றனர்.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 322 பேரில் 265 பேருக்கு, சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணிக்கு 92 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 92 துறை அலுவலர்கள், ஒரு கூடுதல் துறை அலுவலர்கள், 240 பறக்கும்படை உறுப்பினர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 1,300 அறைக்கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 1,752 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களை பார்வையிட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிஇஓ, டிஇஓக்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளவுது.
இந்நிலையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், தேர்வு பணியில் ஈடுபடும் அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
சிஇஓ எழிலரசி தலைமை வகித்தார். டிஇஓ புருசோத்தமன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அறை கண்காணிப்பாளர்கள் 1,300 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது.




