நாமக்கல் மாவட்டத்தில், கோடை காலத்தில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. டிஆர்ஓ. சரவணன் தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 15 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, பல்வேறு கூட்டு குடிநீர் திட்டம் மூலம், நாள்தோறும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கோடை காலம் துவங்க உள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி, தினமும் குடிநீர் வினியோகம் செய்ய அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் பூபதி, டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




