திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் இந்த வார சந்தையானது சனிக்கிழமை தோறும் நடைபெறும்.
இதில் விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கும் காய் கறிகள், பழங்கள், கீரை வகைகள், சிறு தானியங்கள், தேன், விதைகள் போன்றவைகள் தரமாகவும் குறைந்த விலையிலும் விவசாயிகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.
அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சி அடி அண்ணாமலை பகுதியில் உள்ள அபய மண்டபம் அருகில் ரூ.49.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
முன்னதாக வேங்கிக்கால் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை நூலக கட்டிடத்தை திறந்து வைத்து நூலகத்தில் வைக்கப்படுள்ள புத்தகங்களை பார்வையிட்டார் .
அதனை தொடர்ந்து திருவண்ணாமலை வட்டம், இருதயபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடை, திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய நியாயவிலைக் கடை, திருவண்ணாமலை வட்டம், சின்னகல்லப்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தனபதி, மாநகராட்சி துணை மேயர் ராஜாங்கம், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாவட்ட மைய நூலகர் வள்ளி, திருவண்ணாமலை வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




