Close
மார்ச் 10, 2026 8:32 மணி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெப்ப அலை விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற வெப்ப அலை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட சார்பு நீதிபதி வேலுமயில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பழங்களை வழங்கினார்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி வெப்ப அலை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.

மாவட்ட சார்பு நீதிபதி வேலுமயில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு வெப்ப அலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தர்பூசணி, திராட்சை, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற பழங்களையும், பழச்சாறுகளையும் வழங்கினார்.

மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் லலிதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவ மாணவிகள் கோடைக்காலத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் சென்று நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதிக அளவில் தண்ணீர் அருந்தி பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் வெப்ப அலை என்பது மனிதர்களின் உடல்நலத்திற்கும் இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான காலநிலை மாற்ற விளைவு என்பதால், மாணவ மாணவியர் அனைவரும் விழிப்புடன் இருந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளரும் வெப்ப அலை செயல்திட்ட ஒருங்கிணைப்பாளருமான வெஸ்லி மற்றும் காலநிலை கல்வி திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top