தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று 11ம் தேதி துவங்கி வருகிற ஏப். 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 92 தேர்வு மையங்களில், 295 பள்ளிகளைச் சேர்ந்த 9,817 மாணவர்களும், 8,851 மாணவிகளும் என மொத்தம் 18,668 பேர் மற்றும் 300 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
இத்தேர்வினை எழுதவுள்ள 322 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 265 மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் 92 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 92 துறை அலுவலர்கள், 1 கூடுதல் துறை அலுவலர், 240 பறக்கும்படை உறுப்பினர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 8 வினாத்தாள் கட்டுக்காப்பாளர், அறைக்கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கி முதலாவதாக தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 18,397 மாணவ மாணவியர் எழுதினார்கள். 250 தேர்வர்கள் பங்கேற்கவில்லை.
நாமக்கல் கோட்டை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வு மையங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



