Close
மார்ச் 12, 2026 12:53 காலை

பெட்ரோலியத் துறையின் விரிவாக்கம் அவசியம்: பிரதமர் மோடி

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு பெட்ரோலியத் துறையின் விரிவாக்கம் மிகவும் அவசியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கேரளாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, இன்று சுமார் 10,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  நிறுவனத்தின் கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலிப்ரோப்பிலீன் யூனிட் மிக முக்கியமானதாகும். இத்திட்டம் மட்டும் சுமார் 5,500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது: தற்சார்பு இந்தியா மற்றும் ‘மேக் இன் இந்தியா’  திட்டங்களை வெற்றியடையச் செய்ய பெட்ரோலியத் துறையை விரிவாக்கம் செய்வது மிக முக்கியம். கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தின் பாலிப்ரோப்பிலீன் யூனிட் அந்த இலக்கை நோக்கியே அமைக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் சுமார் நான்கு லட்சம் டன் பாலிப்ரோப்பிலீனை உற்பத்தி செய்யும் என்று கூறினார்

இந்த ஆலை பேக்கேஜிங், ஜவுளி, ஆட்டோமொபைல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் பல தொழிற்சாலைகளுக்குப் பேருதவியாக இருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியா தற்போது ஏஐ மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் உலகளாவிய மையமாக மாறி வருகிறது. இத்தகைய அதிநவீனத் துறைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால், பசுமை மற்றும் தூய்மையான எரிசக்திக்கு நாம் மாற வேண்டியது அவசியம் என்றார்.

கொல்லம் மாவட்டத்தின் மேற்கு கல்லடாவில் 50 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு  பிரதமர் அடிக்கல் நாட்டினார். சூரிய மின்சக்தியில் இந்தியா ஏற்கனவே உலகில் முன்னணி நாடுகளின் பட்டியலில் இருப்பதை நினைவுகூர்ந்த அவர், கேரளாவும் சூரிய சக்தியில் முன்னேற வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம் என்றார்.

பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்த திட்டங்களில் சில முக்கிய இரயில்வே திட்டங்களும் அடங்கும். அதன்படி ஷொர்ணூர்-நிலம்பூர் சாலை இரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதன் மூலம், இரயில்கள் விரைவாகவும், இன்ஜின் மாற்றும் அவசியமின்றியும் இயங்க முடியும். கேரளா மற்றும் தமிழ்நாடு இடையிலான இரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில், பாலக்காடு முதல் பொள்ளாச்சி வரையிலான புதிய இரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தச் சேவை தினசரி பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் பயனாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில் கேரள கவர்னர், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top