Close
மார்ச் 12, 2026 11:38 மணி

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த இந்திய கப்பல்

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ எனும் கப்பல் வெற்றிகரமாக மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.

பதற்றம் தொடங்கிய பிறகு, உலகின் மிக முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்தடைந்த முதல் கப்பல் இதுவாகும்.

உலகளாவிய எண்ணெய் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கு (தினசரி 20 மில்லியன் பேரல்கள்) இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. இப்பாதையில் ஏற்படும் சிறு இடையூறும் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

லைபீரியக் கொடியுடன் பயணிக்கும் இந்தக் கப்பல், சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இருந்து மார்ச் 3-ஆம் தேதி புறப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியின் மிகவும் ஆபத்தான பகுதியைக் கடக்கும்போது, கப்பலின் இருப்பிடத்தைக் காட்டும் ஏஐஎஸ் டிரான்ஸ்பாண்டரை மாலுமிகள் தற்காலிகமாக அணைத்து வைத்தனர். தாக்குதல்களில் இருந்து தப்பிக்கவும், கப்பலின் அடையாளத்தை மறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மார்ச் 9 அன்று மீண்டும் டிரான்ஸ்பாண்டர் இயக்கப்பட்டது.

இந்த கப்பலில் இந்தியர் ஒருவரே கேப்டனாக உள்ளார். கப்பலில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த 29 மாலுமிகள் உள்ளனர்.

மும்பை வந்தடைந்த இந்தக் கப்பல், ஜவஹர் தீவில் நிறுத்தப்பட்டது. இதில் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் மும்பை மாஹுலில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வழங்கப்பட உள்ளது. எண்ணெயை இறக்கும் பணி சுமார் 36 மணி நேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின்  கடற்படைத் தளபதி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரானின் அனுமதியைப் பெற வேண்டும், இல்லையெனில் அவை தாக்குதலுக்கு உள்ளாகும் என்று எச்சரித்திருந்தார். ஈரானின் எச்சரிக்கையை மீறிய இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தற்போது பாரசீக வளைகுடா பகுதியில் 28 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் உள்ளன. இதில் 778 இந்திய மாலுமிகள் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிப்ரவரி 28 முதல் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்தியத் தூதரகங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top