தமிழ்நாட்டில் தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று நாமக்கல் கால்நடை கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் தற்போது, 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் சுமார் 680 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் உருவாகின்றனர்.
20வது கால்நடை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 2.45 கோடி கால்நடைகள் உள்ளன. 1976ம் ஆண்டு தேசிய வேளாண்மை கமிஷனின் தரநிலைகளின் படி, தமிழகத்திற்கு 4,900 முதல் 6,125 கால்நடை மருத்துவர்கள் போதுமானதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலில் 8,528 கால்நடை மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். மாநிலத்தில் கால்நடை மருத்துவர்கள் ஏற்கனவே அதிக அளவில் உள்ளனர்.
மேலும் கணக்கீட்டின் படி 2036 ஆம் ஆண்டுக்குள் அரசு துறையில் சுமார் 500 பணியிடங்களே காலியாகும் நிலை உள்ளது. தொடர்ந்து அதிகமான பட்டதாரிகள் வெளியேறுவதால் அந்த நேரத்தில், தமிழகத்தில் சுமார் 10,000 கால்நடை மருத்துவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, புதிய தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவது வேலைவாய்ப்பு பிரச்சினையை மேலும் மோசமாக்கும்.
மேலும், தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்படும் 800 கால்நடை கிளை மையங்களை முழுமையான கால்நடை மருந்தக நிலையங்களாக மேம்படுத்த வேண்டும். கால்நடை பராமரிப்பு துறையில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்,
வனத்துறையில் வைல்ட்லைஃப் வெட்னரியன் பணியிடங்களை உருவாக்க வேண்டும், ஊராட்சி ஒன்றியம் வாரியாக கால்நடை மருத்துவமனைகளை உருவாக்கி, 24 மணி நேர சேவையை வலுப்படுத்த வேண்டும். 1962 கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை 24 மணி நேரமும் 3 ஷிப்ட் பணி முறை அடிப்படையில் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
கால்நடை மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்கி, கல்வி வணிகமாக மாறுவதற்கும், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு குறைவதற்கும் காரணமாக அமையும்.
எனவே, மாணவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தனியார் துறையில் கால்நடை மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என கால்நடை மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




